இந்தியாவில் உலகின் மிகப் பெரிய பசுமை ஆற்றல் பூங்கா! பாரிஸ் நகரைவிட 5 மடங்கு பெருசு!

By SG BalanFirst Published Apr 12, 2024, 12:31 AM IST
Highlights

கவ்தா அருகே உள்ள விமான ஓடுபாதையில் இருந்து 18 கிமீ தொலைவில் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை விட ஐந்து மடங்கு பெரியது.

2022 டிசம்பரில் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள தரிசு நிலப்பகுதியான கவ்தா  என்ற  கிராமத்தில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளாகத்தை அமைப்பதற்கான இடத்தைக் கண்டுபிடித்தார்.

பின்கோடு கூட இல்லாத அந்தத் தரிசுப் பகுதியில் இருக்கும் அதிக உப்புத்தன்மை கொண்ட மண்ணில் தாவரங்கள் ஏதும் விளைவது இல்லை. ஆனால் லடாக்கிற்குப் பிறகு இரண்டாவதாக இந்தியாவிலே சிறந்த சூரியக் கதிர்வீச்சு உள்ள இடமாக அந்தத் தரிசு நிலப்பகுதி இருக்கிறது. மேலும் காற்றின் வேகமும் ஐந்து மடங்கு அதிகம். இதனால் அது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க சரியான இடமாகத் தோன்றியது.

கவ்தா அருகே உள்ள விமான ஓடுபாதையில் இருந்து 18 கிமீ தொலைவில் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா 538 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை விட ஐந்து மடங்கு பெரியது.

அதானி முதன்முதலில் கவ்தாவில் இறங்கிய பிறகு வினாடிக்கு 8 மீட்டர் வேகத்தில் வீசும் காற்றுக்கு மத்தியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலனிகளை உருவாக்கினார். நீரில் இருந்து உப்பை நீக்கும் ஆலை அமைக்கப்பட்டது.

இப்படித்தான் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கவ்டாவில் உருவாகியுள்ளது. இந்தப் பூங்காவில் 30 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் சொல்கிறார்.

"நாங்கள் இப்போது கவ்தாவில் 2,000 மெகாவாட் (2 ஜிகாவாட்) திறனை இயக்கியுள்ளோம், மேலும் மார்ச் 2025 இல் முடியும் நடப்பு நிதியாண்டில் 4 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம். பிறகு ஒவ்வொரு ஆண்டும் 5 ஜிகாவாட் மின் உற்பத்தியைக் கூட்டவும் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் சொல்கிறார்.

முந்த்ரா அல்லது அகமதாபாத்தில் இருந்து குழு நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விமான ஓடுதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமான ஓடுதளம் வெறும் 35 நாட்களில் கட்டப்பட்டது என்று நிர்வாகிகள் சொல்கின்றனர். எரிசக்தி பூங்காவின் வெளிப்புற எல்லை பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிதான் உள்ளது.

மார்ச் முதல் ஜூன் வரை கடுமையான தூசி புயல்கள் ஏற்படும். இதனால், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும். இந்த இடத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் பகுதி 80 கிமீ தொலைவில் உள்ளது. கவ்டா கிராமத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் உள்பட 8,000 தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடம் கட்டப்பட்டு வருகிறது.

அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் இயங்கி வருகிறது.

பெல்ஜியம், சிலி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு முழுமையாக மின்சாரம் வழங்கக்கூடிய அளவுக்கு 81 பில்லியன் யூனிட்களை கவ்டாவில் இருந்து உற்பத்தி செய்ய முடியும் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

click me!