இது எப்படி இருக்கு… ரெயில் முன்பதிவு செய்து.. விமானத்தில் பயணிக்கலாம்.....

First Published Oct 23, 2017, 3:59 PM IST
Highlights
book ticket in rail and travel in flight


ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல்வகுப்பு ஏ.சி. மற்றும் 2-ம் வகுப்பு ஏ.சி.யில் டிக்கெட் முன்பதிவு செய்தும் கிடைக்காவிட்டால், அவர்களை விமானத்தில் பயணிக்க வைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் இடையிலான விலை வித்தியாசத்தை செலுத்தாமலே பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.

ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவராக அஸ்வானி லோகானி இருந்த போது இந்த திட்டத்தை ரெயில்வே துறையிடம் தெரிவித்தார். அப்போது அங்கிருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இப்போது, ரெயில்வே வாரியத்துக்கு அஸ்வானி லோகானியே தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டதால், இந்த திட்டத்தை கையில் எடுத்து நடைமுறைப்படுத்த தீவிரமாக முயற்சி எடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறார்.

இது குறித்து ரெயில்வே வாரியத் தலைவர் அஸ்வானி லோகானி கூறுகையில், “ ராஜ்தானி ரெயிலில் முன்பதிவுசெய்து டிக்கெட் கிடைக்காதவர்கள், கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தாமல், விமானத்தில் பயணிக்க வைக்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஒப்புக்கொண்டால், இந்த திட்டத்தை செயல்படுத்த தயார். ராஜ்தானி 2-ம் வகுப்பு ஏ.சி.யின் கட்டணத்துக்கும், விமானக் கட்டணத்துக்கும் இடையிலான வேறுபாடு மிகச்சிறிய அளவுதான். ஆதலால், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் நாள்தோறும் வேறுரெயிலை நோக்கி செல்கின்றனர். அதேசமயம், விமானப்பயணத்துக்கு டிக்கெட் இருந்தும் கட்டணம் அதிகம் என்று எண்ணி அதை பயணிகள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம், ராஜ்தானி ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தும் கிடைக்காதவர்களின் பெயர் பட்டியில் ஏர் இந்தியா நிறுவனத்திடம் பகிரப்படும், அவர்கள் இருக்கை காலியின் அடிப்படையில், பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு அளிப்பார்கள்.

இந்த திட்டம் இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துடன் மட்டும் பேசப்பட்டு வருகிறது. ரெயில்வே, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், விரைவில் முடிவு தெரியவரும்.

இது குறித்து ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்வே துறையின் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் பலன் கிடைக்கும். ரெயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள், விமானத்தில் பயணிக்க வாய்ப்பு அளிக்கும் போது, இரு தரப்புக்கும் வருவாய் கிடைக்கும். லோகானியின் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், இதே போன்ற திட்டத்தை ரெயில்வே துறை, தனியார் விமான நிறுவனங்களுடன் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

tags
click me!