
உத்தரப்பிரதேசம், ஆக்ராவில் தாஜ்மஹால் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை இரு வெடிகுண்டுகள் வெடித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தாஜ்மஹாலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்ரா தாஜ்மஹால் கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை ஒரு குப்பை கிடங்கில் பெரிய சத்தத்துடன் இரு மர்ம பொருள்கள் வெடித்துச் சிதறின. ஆனால், அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுனர்கள் ஆய்வு நடத்தினர். அப்பகுதி மக்களிடம் விசாரணையும் நடத்தினர்.
இது குறித்து மண்டல ரெயில்வே மேலாளர் பிரகாஷ் குமார் கூறுகையில், “ ஆக்ரா கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே திடீரென இரு மர்ம பொருள்கள் வெடித்தன. இது குறித்து தடவியல் நிபுனர்கள், வெடிகுண்டு நிபுனர்கள் வந்து ஆய்வு செய்து, வெடித்த பொருள் வெடிகுண்டு என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்'' எனத் தெரிவித்தார்
இதற்கிடையே ஆக்ராவில் உள்ள பந்தாய் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து ஜம்முசெல்லும் அந்தமான் எக்ஸ்பிரஸ் வந்தபோது, தண்டவாளத்தில் இருந்த ஒரு பெரிய பாராங்கல் இருந்துள்ளது.
அதைப் பார்த்த ரெயில் டிரைவர் பெரிய விபத்தை தவிர்க்க ‘பிரேக் ’ அடித்தும், ரெயில் அந்த பாறையில் மோதியது. இதில் ரெயிலுக்கு சேதம் ஏற்பட்டது யாரும் காயம் அடையவில்லை. இந்த செயலுக்கும் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.