Goa Election Results 2022 : கோவாவில் பறக்கும் “பாஜக கொடி” பிரியங்கா போட்ட ஸ்கெட்ச் எல்லாம் வேஸ்ட்டா..?

By Raghupati RFirst Published Mar 10, 2022, 12:35 PM IST
Highlights

Goa Election Results 2022 : கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடம் தேவை என்ற நிலையில் பாஜக 19 இடத்தில் முன்னணியில் உள்ளது.

கோவாவில் மொத்தம் 79.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் வாக்கு 78.19 சதவீதமாகவும், பெண்கள் வாக்கு 80.96 சதவீதமாகவும் உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 11.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17, பாரதிய ஜனதா 13 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா 32.5 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தன. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

பா.ஜ.க. ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கோவா மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலின் போது வேலை தருவதாக சொல்லிதான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் வேலைவாய்ப்பை அவர்களால் உருவாக்க இயலவில்லை. இதையே திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் பிரசார யுக்தியாக கையில் எடுத்துள்ளது.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 தருவோம்’’ என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். இதை பார்த்ததும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் நாங்கள் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 தருகிறோம் என்று அறிவித்தார். இப்படி திரிணாமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் அங்கு காலூன்ற தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. வாக்குகள் பிரிவதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இதை உறுதிபடுத்துவதாகவே உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவை பெறுபவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை கோவா அரசியல் களத்தில் நிலவுகிறது.  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. 

மேலும் ஆம்ஆத்மி ஒரு இடத்திலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், முடிவுகள் முழுமையாக வெளிவரும்போது பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கடந்த சட்டசபை தேர்தலை போல், இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைக்கும். 

இதனால், பாஜகவின் பிரமோத் சாவந்த் 2வது முறையாக முதல்வராக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக பிரியங்கா காந்தி அந்த கட்சியின் முகமாக வலம் வந்தார். மிகப்பெரிய போராட்டங்களை ஆளும் அரசுக்கு எதிராக நடத்தினார் என்றாலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை வாக்குகளையும் பெற முடியவில்லை. 

கிராமத்து பக்கங்களில் பழமொழி சொல்வது போல கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக காங்கிரஸ் கட்சி தேய்ந்து ஓய்ந்து போய்விட்டது. தற்போது வரை வெளிவந்துள்ள முடிவுகளின்படி, 5ல் நான்கு மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் கேள்வியாக எழுந்து இருக்கிறது. 

click me!