குடியரசு தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.
14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிகிறது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென்று தனித்தனியே வாக்கு மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ராம்நாத் கோவிந்த் 60,683 வாக்குகளும் எதிர்கட்சிகளின் மீராக்குமார் 22, 941 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ராம்நாத் கோவிந்த் 72% வாக்குகளும், மீராக்குமார் 28% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலை பெற்று வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களின் மாநில மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பீடாக வழங்கப்படுகிறது. புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் விழா வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.