
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 24 உடன் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியின் பணி காலம் முடிவடைகிறது. அதனால் ஜூலை 24 ஆம் தேதிக்குள் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பணிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதி.
அதன்படி நேற்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுகுடியரசு தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் ஜூலை 14 முதல் தொடங்குவதாகவும், ஜூலை 17 ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜூலை 20 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், குடியரசு தலைவர் தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து யாரை வேட்பாளராக அமைக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
மேலும் பாஜக தரப்பில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவரும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி மர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.