ஆதார் செல்லாது... தேர்தல் ஆணையம் சொல்வது சரிதான்! உச்ச நீதிமன்றம் அதிரடி

Published : Aug 12, 2025, 04:47 PM ISTUpdated : Aug 12, 2025, 04:48 PM IST
Supreme Court voter list hearing

சுருக்கம்

ஆதார் அட்டை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக இருந்தாலும், குடியுரிமைக்கு முறையான சரிபார்ப்பு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஆதார் அட்டையை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருந்தாலும், அது குடியுரிமையை நிரூபிக்க போதுமானதல்ல என்றும், முறையான சரிபார்ப்பு அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தை ஆதரித்த உச்ச நீதிமன்றம்

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision) தொடர்பாக எழுந்த சர்ச்சையை விசாரித்தபோது, நீதிபதி சூர்யா காந்த், ஆதார் குடியுரிமைக்கு உறுதியான ஆதாரம் அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியே என குறிப்பிட்டார். ஆதார் அட்டையை ஒரு செல்லுபடியாகும் ஆதாரமாக ஏற்றுக்கொள்வதற்கு முன், அதை முறையாக சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"குடியுரிமைக்கான உறுதியான ஆதாரமாக ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியே. அதை சரிபார்க்க வேண்டியது அவசியம்," என்று மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதி காந்த் தெரிவித்தார்.

வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறையில் குளறுபடிகள்

மனுதாரர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 1950-க்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய குடிமகன் தான் என்று வாதிட்டார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் சரிபார்ப்பு நடைமுறையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒரு சிறிய சட்டமன்றத் தொகுதியில், 12 பேர் உயிருடன் இருந்தும் இறந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பூத் லெவல் அதிகாரிகள் (BLO) தங்கள் கடமைகளை சரியாகச் செய்யவில்லை. 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் கூட, புதிய படிவங்களை நிரப்பும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த படிவங்களைச் சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் சொந்தத் தரவுகளின்படி, 7.24 கோடி பேர் படிவங்களைச் சமர்ப்பித்த போதிலும், 65 லட்சம் பெயர்கள் மரணம் அல்லது குடிபெயர்வுக்கான முறையான சரிபார்ப்பு இல்லாமல் நீக்கப்பட்டுள்ளன என்று கபில் சிபல் குறிப்பிட்டார். இந்த நீக்கங்களை ஆதரிக்க எந்த ஒரு ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையமும் அதன் பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

மறுபுறம், தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தற்போது உள்ள பட்டியல் ஒரு வரைவுப் பட்டியல் மட்டுமே என்று விளக்கமளித்தார். இத்தகைய பெரிய அளவிலான பணியில் சிறிய பிழைகள் ஏற்படுவது இயல்புதான் என்று ஒப்புக்கொண்ட அவர், உயிருடன் இருப்பவர்கள் வேண்டுமென்றே இறந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா என்பதே இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை என்றும், அந்த அதிகாரம் இருந்தால் இந்த செயல்முறைக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்கக்கூடாது என்றும் நீதிபதி சூர்யா காந்த் கருத்து தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!