கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) 19 படங்களைத் திரையிட மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பி-யுமான சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவு அதிகாரிகளின் "சினிமா அறிவின்மையைக்" காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
“முதலில் தடை செய்யப்பட்ட படங்களின் பட்டியல் இன்னும் நீளமாக இருந்தது. ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க, தான் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்த பிறகே சில படங்களுக்கு அனுமதி கிடைத்தது.
1928-ல் வெளியான ரஷ்ய புரட்சி குறித்த தத்துவார்த்தப் படமான "பேட்டில்ஷிப் பொட்டெம்கின்" (Battleship Potemkin) போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையானது. 100 ஆண்டுகால பழமையான, யூடியூப்பில் எளிதாகக் கிடைக்கக்கூடிய படங்களைத் தடுப்பது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'Beef' என்ற தலைப்பைக் கண்டதுமே அதிகாரிகள் ஒரு படத்தைத் தடை செய்துள்ளனர். உண்மையில் அது பசுவதை பற்றிய படம் அல்ல, ஒரு 'ராப்' (Rap artist) கலைஞர் பற்றியது. அதிகாரிகளின் இத்தகைய குறுகிய மனப்பான்மை இந்தியாவின் பிம்பத்தைப் பாதிக்கும்.
சில பாலஸ்தீனத் திரைப்படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிகாரிகளின் அதிகப்படியான எச்சரிக்கை உணர்வையே காட்டுகிறது.
"நமது அதிகாரிகள் முதிர்ச்சியடைய வேண்டும். தாங்கள் பின்பற்றும் விதிமுறைப் புத்தகத்தை விட இந்த நாடு மிகப்பெரியது என்பதை அவர்கள் உணர வேண்டும்," என்று சசி தரூர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் மத்திய அரசின் இந்தத் தணிக்கை நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "அறிவார்ந்த கேரளா இத்தகைய தணிக்கைகளுக்கு அடிபணியாது. அனுமதி மறுக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களும் விழாவில் திரையிடப்படும்," என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.