
பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக 3 ரூம்கள் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று அவர்கள் முன்பதிவு செய்த ரூம்களில் அதிக சத்தத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
இவர்களின் தொல்லை தாங்க முடியாததால் அருகில் இருந்தவர்கள் எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தங்கியிருந்த ரூமுக்கு சென்று அவர்களிடம் விசாரித்தனர். மேலும் அங்கிருந்த இளைஞர்களிடம் போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால் கைது செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர்.
ஆனால் போலீசார் பணத்தை ரொக்கமாக கேட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த இளைஞர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது போலீசார் மிரட்டியதால் பயந்துபோன இளம்பெண் ஹோட்டல் அறையின் பால்கனிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில், இளம்பெண்ணுக்கு தலை, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே இளம்பெண்ணை கூட இருந்த நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை எச்.ஏ.எல். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் பறிக்க முயன்ற போலீசார் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.