ரயில் விபத்து பலி எண்ணிக்கையைக் குறைத்துக் கூற முயலவில்லை: ஒடிசா மாநில அரசு விளக்கம்

By SG BalanFirst Published Jun 5, 2023, 12:28 PM IST
Highlights

ஒடிசா அரசு பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க விரும்பவில்லை என அந்த மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜெனா கூறியுள்ளார்.

பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க ஒடிசா அரசு விரும்பவில்லை என்றும், மீட்புப் பணிகள் முழுவதுமாக பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றன என்றும் ஒடிசாவின் தலைமைச் செயலர் பிகே ஜெனா திங்கள்கிழமை, கூறியுள்ளார்.

ரயில் விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் கூறப்படுகிறதா என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒடிசா வெளிப்படைத்தன்மையை நம்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், "ஆரம்பத்தில் இருந்தே விபத்து நடந்த இடத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் உள்ளனர். அனைத்து பணிகளும் கேமராக்கள் முன்னிலையில் நடந்துள்ளன" என்றும் கூறினார்.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்த ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

அவர் மேலும் கூறுகையில், "இறந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று ரயில்வே கூறியுள்ளது. அதையே நாங்களும் சொன்னோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பாலசோர் மாவட்ட ஆட்சியர் இறப்பு எண்ணிக்கையை சரிபார்த்தபோது, ஞாயிறு காலை 10 மணி வரை பலியானவர்கள் எண்ணிக்கை 275 எனக் கணக்கிடப்பட்டது" என்றார். சில உடல்களை இருமுறை எண்ணியதால் பலி எண்ணிக்கை 288 எனக் கூறப்பட்டதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

"விபத்து நடந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் வருவதற்குத் தடை இல்லை. மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்  முழுக்க முழுக்க பொதுமக்களின் பார்வையில் நடந்தன" என்றும் தலைமைச் செயலாளர் ஜெனா கூறினார். உயிரிழந்த 275 பேரில் இதுவரை 108 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

275 பேர் உயிரிழப்பு; அசுர கதியில் வேலை; மீண்டும் ரயில்கள் இயக்கம்; மனம் உருகிய அமைச்சர்!!

அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்றும் அப்போதுதான் உடல்கள் குடும்பத்தினரால் தகனம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். தற்போது நிலவும் வெப்பநிலை காரணமாக உடல்கள் வேகமாக அழுகும் நிலையில் உள்ளன. எனவே, அவற்றை சட்டத்தின்படி அப்புறப்படுத்த அதிகபட்சம் இன்னும் 2 நாட்கள் காத்திருக்கலாம் எனவும் ஒடிசா தலைமைச் செயலளார் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இறப்பு புள்ளிவிவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 61 பேர் இறந்துள்ளனர் என்றும் 182 பேர் இன்னும் காணவில்லை என்றும் அவர் கூறினார். "ஒரு மாநிலத்தில் இருந்து, 182 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், 61 பேர் மட்டுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் புள்ளிவிவரங்கள் எங்கே உள்ளன?" என்று அவர் பேசியுள்ளார்.

குஜராத்தில் ரூ.13,000 கோடியில் உருவாகும் டாடா மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலை

click me!