
நாளை முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கப்படுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு.சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். மக்களுக்குத் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர் பண மதிப்பு நீக்கப்பட்டதையடுத்து, பணப்பரிவர்த்தனை வெகுவாக குறைந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். இயந்திரங்கள் இயங்காத நிலைமையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வங்கிகளிலும் போதிய அளவு பணம் கிடைக்காததால், பொதுமக்களின் இன்னல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு.சந்தோஷ் கங்குவார் நாளை முதல் ஏ.டி.எம்.
இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், போதிய பணத் தாள்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். இயல்பு நிலையை கொண்டுவருவதற்கு தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.