உத்தர பிரதேச தேர்தலுக்கு முன்பாக ஏசியாநெட் நியூஸ் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், யாதவ் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து ஓபிசி பிரிவு மக்கள் மற்றும் பிராமணர்களின் ஆதரவு பாஜகவுக்கே உள்ளது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்களே உள்ள நிலையில், மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஏசியாநெட் நியூஸ் உத்தர பிரதேச மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
கான்பூர், மேற்குப்பகுதி, ஆவாத், ப்ரிஜ், காசி மற்றும் கோரக்ஷ் ஆகிய 6 மண்டலங்களில் கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 4200 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த சர்வேயில், 48% பேர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்றும், 40% பேர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், யாதவ் சமுதாயத்தினர் 90% பேர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவ் சார்ந்த சமுதாயம் என்பதால், அச்சமுதாயத்தினரின் ஆதரவும் சமாஜ்வாதி கட்சிக்கு உள்ளது. வெறும் 10% யாதவ் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் யாதவ் அல்லாத மற்ற ஓபிசி பிரிவை சேர்ந்தவரக்ளில் 70% பேர் பாஜகவுக்கும், வெறும் 10% பேர் மட்டுமே சமாஜ்வாதி கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸுக்கு 5% பேரும், மற்ற கட்சியினருக்கு 10% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிராமணர்களின் 70% ஆதரவு பாஜகவுக்கே உள்ளது. 20% பிராமணர்கள் சமாஜ்வாதி கட்சிக்கும், 10% பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாதவ் சமூகத்தினரின் ஆதரவு எப்படி சமாஜ்வாதிக்கு இருந்ததோ, அதேபோலவே இஸ்லாமியர்களின் ஏகோபித்த ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கே உள்ளது. 80% இஸ்லாமியர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வெறும் 3 சதவிகிதம் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Jatav எஸ்.சி.க்களில் 30% பேர் பாஜகவுக்கும்,35% பேர் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். Jaatav அல்லாத எஸ்.சி பிரிவில் 40% பேர் பாஜகவுக்கும், 35% பேர் சமாஜ்வாதி கட்சிக்கும், 20% பேர் பகுஜன் சமாஜுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சிக்கு யாதவ் சமூகத்தினரின் ஆதரவு மட்டுமே அதிகமாக உள்ள நிலையில், பாஜகவுக்கு பரவலாக அனைத்து சமூகத்தினரின் ஆதரவுமே உள்ளது.