
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி (ஞானவாபி மசூதி கமிட்டி) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
அதன்படி, ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வினை தொடர அனுமதி அளித்து நேற்று தீர்ப்பளித்தது. மசூதி கமிட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் தொல்லியல் ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது நியாயமானது; நீதியின் நலனில் அறிவியல்பூர்வ ஆய்வு அவசியம் எனவும் தெரிவித்தது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடங்கியுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன், இந்திய தொல்லியல் துறையினர் அறிவியல்பூர்வ ஆய்வினை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதிர் திரிபாதி, “எவ்வளவு நாட்களில் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும் என்பதை இந்திய தொல்லியல் துறை மட்டுமே கூற முடியும். அயோத்தியில் ராமர் கோவில் கணக்கெடுப்பை முடிக்க 7-8 மாதங்கள் ஆனது.” என தெரிவித்துள்ளார்.
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா.. என்ன பயன்? விளக்கம் சொன்ன அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
“ஏஎஸ்ஐ அதிகாரிகள் உட்பட அனைவரும் வந்துள்ளனர். கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. நாங்களும் உள்ளே செல்கிறோம்.” என மற்றொரு இந்து தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு முன்பு நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை விடுத்து மற்ற இடத்தில் தொல்லியல் துறையின் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.