குஜராத் தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி மாநிலம் முழுவதும் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் 66.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இத்தேர்தல் அக்கட்சியினருக்கு கவுரவப் பிரச்னையாகியுள்ளது.
இதனால், இருகட்சியினரும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 25ம் தேதி முதல் டிசம்பர் 12ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.30.6 லட்சம் மதிப்பிலான நாட்டு மதுபானங்களும், ரூ.23.50 கோடி மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ரூ.29.16 கோடி மதிப்பிலான வாகனங்கள் உட்பட மற்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 26,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.