Aryan khan case : ஆர்யன்கான் வழக்கில் மெகா ட்விஸ்ட்.. ஆதாரம் இல்லாததால் விசாரணை நிறுத்தம்.. மீண்டும் பரபரப்பு!

By Asianet TamilFirst Published Dec 22, 2021, 10:47 PM IST
Highlights

ஆர்யன் கானை சொகுசு கப்பலில் என்சிபி அதிகாரிகள் கைது செய்தபோது அவரிடம் எந்த போதைப் பொருளும் இல்லை என்பதைக் கோடிட்டுதான் உயர் நீதிமன்றம் ஜாமீனே வழங்கியது. 
 

நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் அவரை விடுவிக்க பணப் பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்று மும்பை போலீசார் வழக்கு விசாரணையை நிறுத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதாக போதைத் தடுப்பு பிரிவு(என்சிபி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இதில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைதாயினர். இந்த வழக்கில் 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் அக்டோபர் 28 அன்று ஜாமீனில் வெளியே வந்தார். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றம்தான் ஜாமீன் வழங்கியது. ஆர்யன் கானை சொகுசு கப்பலில் என்சிபி அதிகாரிகள் கைது செய்தபோது அவரிடம் எந்த போதைப் பொருளும் இல்லை என்பதைக் கோடிட்டுதான் உயர் நீதிமன்றம் ஜாமீனே வழங்கியது. 

இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது பல திருப்பங்கள் அரங்கேறின. ஆர்யன் கானை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப் பணப் பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்த விவகாரம் தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை மும்பை போலீஸார் ஏற்படுத்தினர். இந்நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் விசாரணை நிறுத்தப்பட்டிருப்பதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணை நடத்தியும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இதற்கு பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தி நிறுவனத்திடம் மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "மும்பை போலீசார் இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உருவாக்கி 20 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், பணப் பேரம் நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே, எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் ஆர்யன் கான் மற்றும் அவருடைய நண்பர்களின் வாட்ஸ் அப் உரையாடல்களை முக்கியமான ஆதாரமாக என்சிபி அதிகாரிகள் சமர்பித்திருந்தனர். ஆனால், பார்ட்டிக்கு செல்ல திட்டமிட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை இந்த வழக்கில் நீதிபதி ஏற்கெனவே கருத்து கூறியிருந்தார். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் என்சிபி அதிகாரிகள் திணறினர். இந்நிலையில் பணப் பேரம் தொடர்பாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று மும்பை போலீஸ் விசாரணையை நிறுத்தியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

click me!