அரசு வங்கிகளின் வழங்கும் திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளர்ச்சியை அதிகப்படுத்த அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2.11 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிவித்தார். வங்கிகளின் மூலதன வலுப்படுத்த அறிவிக்கப்பட்ட இந்த மெகா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. சிறுதொழில்கள், வர்த்தகர்கள், நடுத்த தொழில்கள் கடுமையாக முடங்கின. மேலும், ஜி.எஸ்.டி. வரியும் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்டதால், வர்த்ககம், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 2-வது காலாண்டில் 5.7 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் கார்க், நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது- கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை இந்தியா பெற்றுள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் திருப்திகரமாக இருக்கிறது. மிகைப்பொருளாதார காரணிகளான பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், அன்னியச் செலவானி கையிருப்பு, விலைவாசி கட்டுக்கு இருப்பது, தனிநபர் வருமானம், தேசிய உற்பத்தி, அன்னிய முதலீடு உள்ளிட்டவை வலிமையாக இருப்பதால், வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இப்போது இருக்கும் சூழல் மேம்பாடு அடையும் போது அடுத்த கட்ட அறிக்கை அளிக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் குறித்து அடிக்கடி அமைச்சகங்களுக்கு இடையே ஆய்வுக்கூட்டம் நடத்தி, விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடியுடனும் பொருளாதார வளர்ச்சி குறித்து விவாதிக்கிறோம். உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் இருந்து வருகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த தேவையான அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் சிறப்பு கடனுதவி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி கடனாக, மூலதனத்தை வலுப்படுத்த வழங்கப்படும். இதில் ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.76 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும். வங்கித்துறையை வலுப்படுத்த, சிறப்பாக செயலாற்ற வைக்க அடுத்து வரும் நாட்களில் வங்கிச்சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் வங்கிகள் கடன் வழங்கியதில் கண்மூடித்தனமாக செயல்பட்டுள்ளன. இதனால், வாராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த 2008 முதல் 2014ம் ஆண்டுகள் வரை வாராக்கடன் கடுமையாக உயர்ந்துள்ளது. அது மூடி மறைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வந்த அரசு, வங்கிகளின் சொத்துமதிப்பை மறுமதிப்பீடு செய்தபோதுதான் உண்மைசூழல் தெரியவந்தது. வங்கித்துறையை கடுமையான வாராக்கடனில் சிக்கித் தவிக்கிறது. அரசின் புள்ளிவிவரங்கள் படி, 39 வங்கிகளின் வாராக்கடன் ரூ.8.35 லட்சம் கோடியாகும். அரசு அறிவித்துள்ள இந்த கடன் உதவித் திட்டம் மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் கொடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.