
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களின் நிலையையும், ராணுவ முகாமில் நடக்கும் ஊழல் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்ட வீரர் தேஜ் பகதூர் யாதவுக்கு உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் அவர் வீடியோ மூலம் ராணுவ வீரர்களின் அவலங்களை தெரிவித்ததால், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றி வந்த வீரர் தேஜ்பகதூர், எல்லைப்பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குடிநீர் குழாய் சீரமைக்கும் பிளம்பர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, வீரர் தேஜ்பகதூர் மதுபோதைக்கு அடிமையானவர். மனநலம் பாதிக்கப்பட்டவர். பணியில் நேர்மையற்றவராக உள்ளார் என தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக தேஜ்பகதூர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘எனது எல்லை பணியை இழந்ததற்காக நான் கவலைப்படவில்லை, இந்த போராட்டம் மூலம் வீரர்களுக்கு பயன் கிடைத்தால் அதுவே போதும்’’ என்றார்.