
அமித்ஷா தமிழகத்தில் 'சைலண்ட்' ஆபரேஷன் செய்யப்போவதாக பாஜகவின் தமிழகத் தலைர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரைக்கு வருகை தந்தார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு:
இக்கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், "சூரியன் நம்மை சுட்டெரிக்கும் என்பதால் இந்தக் கூட்டத்திற்காக இங்கு இவ்வளவு பெரிய பந்தல் போடப்பட்டது. ஆனால் அமித்ஷா வந்தவுடன் சூரியனே மறைந்து போய்விட்டது. பஹல்காம் தாக்குதலில் நமது சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பிரதமர் மோடி 'சிந்தூர்' ஆபரேஷனை செய்தார். அதே போல் அமித்ஷா இன்று மதுரை மீனாட்சியம்மனை தரிசித்துவிட்டு தமிழகத்தில் 'சைலண்ட்' ஆபரேஷன் செய்யப்போகிறார்.
1976-ல் தமிழக ஆளுநராக கே.கே.ஷா இருந்தபோது, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்று முதல் தி.மு.க.வுக்கு 'ஷா' என்ற பெயரைக் கேட்டாலே ஷாக் அடிக்கும். நமது தமிழக முதலமைச்சர், 'யார் அந்த ஷா?' என்று கேட்கிறார். அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தவர் இந்த ஷா. மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வந்தவர் இந்த ஷா. டெல்லியில் கெஜ்ரிவாலைத் தூக்கி எறிந்துவிட்டு பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வந்தவர் இந்த ஷா. அவர்தான் எங்கள் அமித்ஷா." என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தபோது கூட்டணியை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். தற்போது மீண்டும் இங்கு வந்துள்ளார். தொடர்ந்து மாதந்தோறும் வர இருக்கிறார். தி.மு.க. பயந்து போயிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி மலர்ந்தே தீரும். சட்டமன்றத்திற்கு நமது எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு போகும் யாத்திரையை நான் நடத்துவேன்" என்று தெரிவித்தார்.