
இந்திய அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடைய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், நமது அரசாங்கங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக, அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியை காணொலி காட்சி வழியாக சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, உலக பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்.
மேலும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் மிருகத்தனமான போரின் விளைவுகள் மற்றும் உலகளாவிய உணவு வழங்கல் மற்றும் பொருட்களின் சந்தைகளில் அதன் சீர்குலைக்கும் தாக்கத்தை தணிப்பது பற்றிய அமெரிக்காவின் நெருக்கமான ஆலோசனைகளை பைடன் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விஷயம் கவலைக்குரிய ஒன்றாக இருக்கும் தருணத்தில் நமது இந்த உரையாடல் நிகழ்கிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி பரிதவித்து வந்தனர். அவர்களில் பலர் மாணவர்கள் ஆவர். உங்களுடனும், உங்களது இரு அமைச்சர்கள் மற்றும் தூதருடன் காணொலி வாயிலாக பேசும் சந்தர்ப்பத்தினை இன்று பெற்றதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கொரோனா காலத்தில் நாம் சந்தித்த சர்வதேச அளவிலான சவால்கள், சுகாதார பாதுகாப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய சில விசயங்களை நாம் தற்போது கவனத்தில் கொண்டுள்ளோம். உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக, பலமுறை நான் பேசியுள்ளேன். அமைதி காக்கும்படி இருவருக்கும் வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசும்படி அதிபர் புதினுக்கு ஆலோசனையும் கூறினேன். உக்ரைன் விவகாரம் பற்றி எங்களுடைய நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்திய - அமெரிக்காவின் நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என்று தெரிவித்தார்.