2022ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. முதல்கட்டமாக தரைமட்ட தங்குமிடத்திலிருந்து 2,750 பக்தர்கள் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசிக்கப்புறப்பட்டனர்.
2022ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கியது. முதல்கட்டமாக தரைமட்ட தங்குமிடத்திலிருந்து 2,750 பக்தர்கள் தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசிக்கப் புறப்பட்டனர். 40 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த யாத்திரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் யாத்திரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த்காக் மாவட்டம், பாஹல்காம் பகுதியில் உள்ள நுவான் முகாமிலிருந்து பக்தர்கள் பயணத்தை உதவி ஆணையர் பியூஷ் சிங்களா தொடங்கி வைத்தார். பெரும்பாலும் பக்தர்கள் நடைபயணமாகவே சென்று பனி லிங்கத்தைத் தரிசிப்பார்கள். 3 நாட்கள் நடைபயணத்தில் சீங்கா மற்றும்பஞ்சதந்திரி பகுதியில் இரவு பக்தர்கள் தங்குவார்கள்.
அமர்நாத் யாத்திரை 43 நாட்கள் நடத்தப்படும். இந்த யாத்திரையில் பக்தர்கள் பாதுகாப்பாகச் சென்றுவருவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறுகையில் “ அமர்நாத்தில் உள்ள பனிலிங்கேஸ்வரரை பக்தர்கள் பாதுகாப்பாக தரிசித்து திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்
ஜம்மு முகாமிலிருந்து முதல்கட்டமாக 4,890 பக்தர்களின் அமர்நாத் பயணத்தை மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். பனி லிங்கத்தை ஆன்லைன் மூலம் தரிசனம் செய்வதற்கும் தேவையான வசதிகளை ஸ்ரீ அமர்நாத் கோயில்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால் கடந்த 3 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லாததால், இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் 370பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் யாத்திரை நடக்கவில்லை.
ஆதலால், இந்த ஆண்டு பக்தர்கள் அமர்நாத் குகைக் கோயிலுக்கு பனி லிங்கத்தை தரிசிக்க அதிக அளவில் செல்வார்கள் என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்கள்பாதுகாப்புக்காக ஏராளமான பாதுகாப்புப் படையினர் மலைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பால்தல், பஹால்ஹாம் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் வராத வகையில், அசம்பாவிதங்களும் நிகழாதவகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, ஆர்எப்ஐடி சிப்ஸ் என 3அடுக்கு பாதுகாப்பு பக்தர்களுக்காக தரப்பட்டுள்ளது. அமர்நாத் கோயிலிலும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கிய அமர்நாத் யாதித்ரை ரக்ஸாபந்தன் தினமான ஆகஸ்ட் 11ம் தேதி முடிகிறது