தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்!

By Manikanda PrabuFirst Published Jun 13, 2024, 6:05 PM IST
Highlights

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கேபினட் அமைச்சருக்க்கு இணையான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது நியமனம் 2024 ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவிக்காலத்துடன் இணைந்து அவரது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால், மோடியின் பதவிக்காலம் முடிவடையும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் அஜித் தோவல் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அமைச்சரவை நியமனக் குழு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்ட நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே. மிஸ்ராவின் பதவிக்காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றதையடுத்து, 2014ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் முதன்முறையாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2019இல் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததையடுத்து, இரண்டாவது முறையாக அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக தலைமையிலான மத்தியில் அமைந்துள்ளதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்கில் போர் வெற்றி 25ஆவது ஆண்டு: திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தொடக்கம்!

கடந்த 1968ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். உளவுப் பிரிவு, ராஜதந்திர நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் பெற்ற அஜித் தோவல், உளவுத்துறை (Intelligence Bureau)  இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான ‘ரா’விலும் அவர் பணியாற்றியுள்ளார்.

 பஞ்சாப், மிசோரம் கிளர்ச்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, காந்தகார் விமானக்கடத்தல், புல்வாமா தாக்குதல் என நாடு பல நெருக்கடியான நேரத்தில் அஜித் தோவல் திறம்படப் பணியாற்றி வெற்றியைத் தேடித் தந்தவர். உளவுத்துறையின் பணியாற்றிய போது, மிசோரம் கிளர்ச்சியை அடக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அஜித் தோவல். அதற்கான ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை அஜித் தோவலையே சாரும்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது  என பல முக்கிய நடவடிக்கைகளில் அஜித் தோவலின் பங்கு முக்கியமானது. உளவுத்துறை (Intelligence Bureau)  தலைவர் பதவியில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற அஜித் தோவல், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.

click me!