ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயர்வு: இஸ்ரோ தகவல்!

By Manikanda PrabuFirst Published Sep 15, 2023, 10:12 AM IST
Highlights

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

சந்திரயான்-3 தரையிறக்கத்தின் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்ததாக சூரியனை ஆராய்ச்சி செய்யும் ரூ.424 கோடி மதிப்பிலான ஆதித்யா எல்1 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹிரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட்டின் மூலம் ஆதித்யா எல்1 செயற்கைகோள்  வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதையை உயர்த்தும் செயல்முறையை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை 4ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. X 1,21, 973 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 4ஆவது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5ஆவது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை வருகிற 19ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Aditya-L1 Mission:
The fourth Earth-bound maneuvre (EBN#4) is performed successfully.

ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation, while a transportable terminal currently stationed in the Fiji islands for… pic.twitter.com/cPfsF5GIk5

— ISRO (@isro)

 

அடுத்தக்கட்ட உயர்வின்போது, புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லேக்ரேஞ் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

முன்னதாக, ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப்பாதை கடந்த 3ஆம் தேதியும் இரண்டாவது சுற்றுவட்டப்பாதை கடந்த 5ஆம் தேதியும்,  3ஆவது முறையாக கடந்த 10ஆம் தேதியும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டன.

kalaignar magalir urimai thittam: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: உரிமைப் பாதையில் உன்னத திட்டம்!

ஆதித்யா எல்1 செயற்கைகோள் மொத்தம் 7 பேலோடுகளை சுமந்து சென்றுள்ளது. இதில் 4 பேலோடுகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும். 3 பேலோடுகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்-1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லேக்ரேஞ் புள்ளியை (L1) ஆதித்யா எல்1 செயற்கைகோள் ஏவப்பட்ட நாளில் இருந்து அடைய 125 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே Lagrange point எனப்படும் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில் நிலவும் சமநிலை காரணமாக, இங்கு வைக்கப்படும் பொருள் சூரியனால் ஈர்க்கப்படாது. அந்த புள்ளிகளில் நிலைநிறுத்தப்படும் பொருட்களுக்கு சூரியனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதன்படி, லேக்ரேஞ் புள்ளி 1 (எல்1)-இல், இஸ்ரோவின் ஆதித்யா எல்1 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படவுள்ளது.

click me!