இனிமேல் தேர்தலில் ஓட்டுப் போட ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டும் என்றும் வாக்களார் அட்டைக்கு பதிலாக ஒற்றை அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்தலாம் என்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசின் பல்வேறு மானியங்களைப் பெற ஆதார் அவசியம் என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மொபைல் எண் முதல் வங்கிக் கணக்கு, பான் கார்டு, என்று அனைத்துக்கும் ஆதார்! ஆதார்! என்று ஆதாரை திணித்துக் கொண்டிருப்பதால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ளது மத்திய மோடி அரசு.
ஆதார் தேவையில்லை என்பது மக்களின் கருத்து அல்ல. கட்டாயமாக்க கூடாது என்பதே அவர்கள் விருப்பம். தனிமனித தகவலை அம்பளமாக்க கூடாது. அதனை காண்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்று நீதிமன்றம் கூறினாலும், அப்போதும் ஆதார் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது மத்திய அரசு.
இந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை ஆவணமாக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கருத்து வைத்துள்ளார்.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அது இல்லாத பட்சத்தில் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று பேட்டியளித்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியது:
“இப்போது, இந்தியாவில் அரசின் வெவ்வேறு துறைகள் மக்களுக்கு தனித்தனியான அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இதுபோன்ற அடையாள ஆவணங்கள் அதிகமிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
எனவே, கூடுதலாக வெவ்வேறு அட்டைகளை வழங்கி குழப்பத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது. அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இப்போது ஆதார் பெற்றுள்ளனர். அடையாள ஆவணம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, தேர்தலிலும் அதனை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
மேலும், ஆதார் அட்டையையே, வாக்காளர் அடையாள அட்டையாகவும் அறிவித்துவிட்டால் மக்களுக்கு மிகவும் எளிதாகவே இருக்கும். தேர்தலில் வாக்களிக்க அவர்கள் தனியாக வாக்காளர் அட்டையைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆவணமாக ஆதாரை அறிவிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். 2019 அல்லது 2020-ஆம் ஆண்டில் தேர்தலில் வாக்களிக்க அனைவரும் ஆதாரை பயன்படுத்த வேண்டுமென்று அறிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.