அபிநந்தன் எங்கே எப்போது ஒப்படைக்கப்படுகிறார்..? பாகிஸ்தான் பணிந்தது எப்படி..?

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2019, 5:44 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்பட உள்ளதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவித்துள்ளார். 
 

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்பட உள்ளதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அபிநந்தன் நாளை மதியம் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் பணிந்தது எப்படி என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. ஜெனிவா ஒப்பந்தப்படி, ஒரு நாட்டின் போர் வீரர், மற்றொரு நாட்டு வீரர்களிடம் சிக்கினால், அவரை எந்தவித காயமும் படுத்தாமல், ஏழு நாட்களுக்குள், அவரின் தாய் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். 

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் தவறி விழுந்த அபிநந்தனை, பாகிஸ்தானியர் அடித்து காயப்படுத்திய வீடியோ, இணையத்தில் வேகமாக பரவியது. அதன் பின்னர், அவர் சிகிச்சை பெற்று, டீ குடித்துக் கொண்டே பேசுவது போன்ற வீடியோவும் வெளியானது. இது போன்ற வீடியோக்கள் வெளியிடுவது, ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என, நம் நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. தவிர, அபிநந்தனை எவ்வித நிபந்தனையும் இன்றி, எந்த காயமும் ஏற்படுத்தாமல் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

மத்திய அரசின் தொடர் நடவடிக்கை, சர்வதேச நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், அபிநந்தனை விடுவிக்க, பாகிஸ்தான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய விமானப்படை அதிகாரி, அபிநந்தனை, நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியை விரும்பும் நோக்கத்திலும் விடுவிப்பதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். 


 

click me!