மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன்: ரூ.75,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்!

Published : Feb 01, 2024, 02:10 PM IST
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன்: ரூ.75,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்!

சுருக்கம்

மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு தேர்தல் நடைபெறவுள்ளாதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 

“வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எதிர்கால பார்வையை நனவாக்க, மாநிலங்களில் பல வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் தேவை. மாநில அரசுகளின் அத்தகைய சீர்திருத்தங்களை ஆதரிக்க 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக நடப்பாண்டில் ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களின் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்காக 2023-24 மத்திய பட்ஜெட்டில் சிறப்பு உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடி 50 ஆண்டு வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.56,415 கோடி முதலீட்டு திட்டங்களுக்கான நிதி விடுவிக்கப்பட்டது. மேலும், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிற 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வசதி, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக, கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Union Budget 2024 இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிறைவு: மக்களவை ஒத்தி வைப்பு!

அதேபோல், கடந்த 2022-23 நிதியாண்டில் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.95,147.19 கோடி மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.81,195.35 கோடி விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரையின்போது, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால், பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை.

மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்த நிர்மலா சீதாராமன்!

2023-24ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடியாக உள்ளது. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடியாகவும், நிதி பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!