உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து இருக்கிறார்.
லக்னோவில் நடைபெற்ற 'ரோக்சர் மாநாடு' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது:-
உத்தரப் பிரதேசத்தில் 1 கோடி பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிகிறது. அவர்களில் 70 லட்சம் பேருக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.
எங்களது திட்டங்களால், அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.விவசாயத் துறையானது மிகவும் பரந்து விரிந்த துறையாகும்.
அந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன. அந்தத் துறையை வேலைவாய்ப்புடன் நாங்கள் இணைப்போம். விவசாயத் துறையானது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மிகப்பெரிய ஆதாரமாகும்.
அந்த துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலமும், சிறிய அளவில் முதலீடுகளை செய்வதன்மூலம், வருமானத்தை 3 மடங்காக அதிகரிக்க முடியும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், நம்மால் தன்னிறைவு அடைய முடியாது.
இவ்வாற அவர் கூறினார்.
விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து ஆதித்யநாத் பேசியபோது, நிதி ரீதியிலான பல்வேறு சவால்கள் தனது முன்பு இருப்பதாகவும், எனினும், வீண் செலவீனங்களை தனது அரசு ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பங்களாக்களில் வெள்ளையடிப்பது தவிர, பிற ஆடம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டாம், புதிய வாகனங்களை வாங்க வேண்டாம் என்று அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும், இதன்வாயிலாக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.