
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ள நிலையில், மாசு அளவைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் நச்சுப் புகை மற்றும் காற்று மாசு காரணமாக GRAP III மற்றும் GRAP IV ஆகிய அவசரகால நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, வரும் வியாழக்கிழமை முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற (WFH) அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேலை இழந்த பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.
மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு முகமைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த 'Work From Home' விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டத்தைக் கடுமையாகச் சாடிய அமைச்சர் கபில் மிஸ்ரா, "முந்தைய முதலமைச்சர்கள் மாசு நிலவும் காலங்களில் ஓடிவிடுவார்கள், ஆனால் தற்போதைய முதலமைச்சர் களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறார். 30 ஆண்டுகாலப் பிரச்சனையை 5 மாதங்களில் சரிசெய்துவிட முடியாது," என்று தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் பிஎஸ்-III பெட்ரோல் மற்றும் பிஎஸ்-IV டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் அல்லது 'ஹைப்ரிட்' முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வகையான கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்கும் முழுமையான தடை அமலில் உள்ளது.