Assembly Election Results 2022 : யாருக்கு சாதகமா இருக்கும் இன்றைய தேர்தல் முடிவு ?

By Raghupati RFirst Published Mar 10, 2022, 6:43 AM IST
Highlights

Assembly Election Results 2022 : உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரிவிக்கிறது.

இன்று வெளியாகிறது முடிவுகள் :

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள், முக்கிய பங்கு வகிக்கப்போகின்றது. அந்த வகையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர்த்து பிறவற்றில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆளுகிறது.

Latest Videos

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 இடங்களை கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உ.பி.யை பா.ஜ.க. தக்க வைக்குமா என்பது தெரிய வந்துவிடும்.

கடும் போட்டி :

உத்தரகாண்டில் 70 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர்சிங் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து களம் இறங்கினார். 

சிரோமணி அகாலிதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த அணிகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என கூறப்படுகிறது.

மீண்டும் ஜெயிப்பது யார் ? :

பா.ஜ.க. ஆளுகிற மணிப்பூரில் 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. சுமார் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கோவாவில் 40 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. சுமார் 79 சதவீத வாக்குகள் பதிவாகின.

முதல்முறையாக இங்கு பா.ஜ.க. 40 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக இங்கு வேட்பாளர்களை நிறுத்தியது. ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று தெரிவித்து உள்ளது.

உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் போட்டியில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் பா.ஜ.க.வுக்கு கருத்துக்கணிப்புகள் ஆதரவாக அமைந்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி,  மணிப்பூரில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும், கோவாவில் இழுபறியாகவும் கருத்து கணிப்புகள் அமைந்துள்ளது. 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று நமக்கு தெரிந்துவிடும்.

click me!