
1.. இதய நோய் பற்றி இளம் வயதில் கவலை பட வேண்டும்…
இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது.
எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல… இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
2.. இதயநோய்க்கான அறிகுறிகள்..
வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம்.
சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது.
எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.
3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த…
நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.
4. வயதானால் உயர் ரத்த அழுத்தம் வருமா?
நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது.
ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.
5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தால் இதய நோய் வராதா?
சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம்.
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.