
வயிற்றுப் பிரச்சனை:
புளி ஏப்பம், ஏப்பம், திடீரென அதிக அளவு உமிழ்நீர் சுரத்தல், வாயுத் தொந்தரவு, உப்புசம், பித்த மயக்கம், குமட்டல், வாந்தி எடுத்தல், குடலில் அதிக அளவில் இரைச்சல் கேட்பது, விட்டுவிட்டுப் பேதியாவது, மலச் சிக்கல் இப்படிப் பலவிதமான வயிற்றுப் பிரச்சனைகள் இருக்கிறது.
முதல் நாள் இரவு கரைத்து வைத்த இட்லி மாவு புளித்து, அதில் காற்று உண்டாகி, முதலில் பாத்திரத்தில் முக்கால் அளவு இருந்தது மறுநாள் காலை பாத்திரம் முழுக்க நிரம்பி, குப்பென்று உப்பி இருப்பதைப் பார்த்து இருப்பீர்கள்.
அந்த மாறுதலுக்கு ஃபெர்மென்டேஷன் அல்லது புளித்தல் என்று பெயர். இதற்கு, புளிப்பேற்றுதல், புளிப்பு ஊக்கம், நொதிப்பித்தல் எனப் பல பெயர்கள் இருந்தாலும், புளித்துப் பொங்கும்படி செய்தல் என்பதுதான் இந்த நிகழ்வுக்கான அர்த்தம்.
இப்படிச் சரிவர செரிமானமாகாமல் ரத்தத்தில் கலக்காத மாவுப் பொருட்கள் சிறுகுடலின் கிருமிகளால் (பாக்டீரியாக்களால்) புளிக்கச் செய்யப்படும் நிலையில், நிறையக் காற்று உண்டாகி, வயிற்றுப் பகுதியில் உப்புசம் ஏற்படச் செய்கிறது.
உணவை விழுங்கும்போது நாம் சிறிதளவு காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். குறிப்பாக குழந்தைகள் பால் குடிக்கும்போது காற்று அதிகமாக வயிற்றுக்குள் போகிறது. அதுவும் உப்புசத்தை உண்டாக்குகிறது.
கரியமில வாயு கலந்த பானங்கள், பேதி உப்பு எனச் சொல்லப்படும் சில உப்புகள் ஆகியவை வயிற்றுப் புளிப்போடு கலந்து அதிக அளவு கரியமில வாயுவை வெளிப்படுத்தும். இதனால், அடிக்கடி ஏப்பம் வரும். இதனாலும் உப்புசம் ஏற்படும்.
தீர்வு:
50 கிராம் கட்டி பெருங்காயத்தை தட்டி அதில் 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்து 1 கரண்டி பொடியை மோரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்க வயிறு உப்புசம், வயிறு பொருமல் குறையும்.
பசிக்காவிட்டால் சாப்பிடும் வேலை மிச்சம்தானே! என நீங்கள் நினைக்கலாம்.
'பசி வந்தால் பத்தும் பறக்கும்’ என்பார்கள். ஆனால், பசியின்மை வந்தால், நம் உடலே பறந்துவிடும் என்பதை நாம் அறிய வேண்டும்.