
இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத சிறப்பு நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள் உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் - அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை இதுவே. பஞ்சாபி உணவு வகையிலும் இது மிகவும் பிரபலம்.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம்.
அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.
பயன்பாடுகள்:
கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது.
வடஇந்தியாவில் தால் மக்கானிக்கு இதுவே அடிப்படை.
வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு.
அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும்.
ஊட்டச்சத்து:
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும்.
# முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.
# நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
# உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.
# கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.