தேக்கு மரம் போல் உடல் வேண்டுமா? அப்போ இந்த சிறுதானியத்தை தினமும் சாப்பிடுங்கள்...

First Published Mar 27, 2018, 1:40 PM IST
Highlights
Does the body like teak tree Eat this little bit of food everyday ...


தேக்கு மரம் போல் உடல் வேண்டுமென்றால் சிறுதானியமான தினையை தினமும் சாப்பிடுங்கள்...

தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். இதனை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல வகையாக பிரிக்கிறார்கள். 

தினைக்கு ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டெயில் மில்லட்‘ என்று பெயர். கதிரோடு இருக்கும் தினையை பார்க்கும்போது அது நரியின் வால் போல் தெரிவதால் வெள்ளையர்கள் அப்படியொரு பெயரை வைத்துவிட்டார்கள்.

தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. 

பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6000 கால கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது.

தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான். தினை இந்தியாவில் பயிராகும் ஒரு வகை உணவுப் பொருளாகும். 

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

தேனும், தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. 

இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்ததோடு நோயின் பாதிப்புக்கும் ஆளாகிறது.

இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று. மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினை மாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். 

தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இப்போது மீண்டும் தினை உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சியான செய்தி. தினை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
 

click me!