சாவேஸின் நிழலில் வளர்ந்த நிக்கோலஸ் மதுரோ, வெளியுறவு அமைச்சர், துணை அதிபர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். 2013ஆம் ஆண்டு சாவேஸின் மறைவுக்குப் பிறகு, வெனிசுவேலாவின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றினார். ஆனால் அவரது ஆட்சி காலம் சர்ச்சைகளாலும் முரண்பாடுகளாலும் நிரம்பியது என்றும் கூறலாம். ஒருபுறம் மக்களை குஷிப்படுத்தும் அறிவிப்புகள், மறுபுறம் எதிர்க்கட்சியினரின் போராட்டங்களை அடக்கியதாக குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்தன.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கவனிக்கத்தக்க அம்சம், இந்தியாவின் ஆன்மிக குரு சத்ய சாய் பாபா மீது ஆழ்ந்த பக்தி கொண்டது என்றே கூறலாம். நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள். 2005ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று, சாய்பாபாவின் உரைகளை தரையில் அமர்ந்து கேட்ட புகைப்படங்கள் இன்றும் பரவலாகப் பார்க்கப்படுகின்றன. அவரது அதிபர் அலுவலகத்தில் புரட்சித் தலைவர்களின் படங்களுடன் சாய்பாபாவின் பெரிய புகைப்படமும் இருந்தது என்பது குறிப்பிடவேண்டிய அம்சமாகும்.
சாய்பாபாவின் மறைவின் போது வெனிசுவேலாவில் தேசிய துக்கம் அறிவித்த ஒரே வெளிநாட்டு தலைவர் மதுரோ என்பது குறிப்பிடத்தக்கது. சாய்பாபாவின் “அனைவரையும் நேசிக்க வேண்டும்” என்ற போதனைகளை பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார், தற்போது கடும் அரசியல் நெருக்கடிகளுக்கும் சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும் நடுவே நிற்கிறார். பஸ் ஓட்டுநராகத் தொடங்கி ஒரு நாட்டின் “அரசன்” போல அதிகாரம் பெற்ற இந்த மனிதனின் வாழ்க்கை, ஆன்மிகம், அரசியல், சர்ச்சைகள் என பல பரிமாணங்களைக் கொண்டதாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது.