பிரிட்டன், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாடுகளின் முடிவு பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ன நாடே இருக்காது" என்று நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
23
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரிக்கை
"பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. இதற்கான பதில் நான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு வழங்கப்படும்" என்று நெதன்யாகு தனது அறிக்கையில் கூறினார்.
மேலும், "அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நான் ஒரு தெளிவான செய்தியை சொல்கிறேன்: நீங்கள் பயங்கரவாதத்திற்கு ஒரு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு செய்தியையும் கூறுகிறேன். அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது" என்று அவர் கூறினார்.
"உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அழுத்தத்திற்கு மத்தியிலும், அந்த பயங்கரவாத அரசு உருவாவதை நான் பல ஆண்டுகளாக தடுத்துள்ளேன். நாங்கள் இதை உறுதியுடனும், சிறந்த ராஜதந்திரத்துடனும் செய்துள்ளோம். யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளில் உள்ள யூத குடியேற்றங்களை நாங்கள் இரட்டிப்பாக்கியுள்ளோம், இந்த பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
33
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா எடுத்த முடிவு
காசா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று சர்வதேச அளவில் பெரும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக முறையாக அங்கீகரித்துள்ளன.
மூன்று நாடுகளின் பிரதமர்களும், காசாவில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் இரு நாடுகள் தீர்வைக் காண்பதற்கு பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே வழி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, போர்ச்சுகலும் பாலஸ்தீனத்தின் இறையாண்மையை அங்கீகரித்து இந்த பட்டியலில் இணைந்தது.