நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறைப் போராட்டங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, நேபாள அரசு சமூக ஊடக நிறுவனங்கள் அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டுமென அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 28 முதல் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டும், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெடிட், மற்றும் லிங்க்ட்இன் போன்ற முக்கிய நிறுவனங்கள் எதுவும் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கவில்லை. இதன் விளைவாக, அந்த நிறுவனங்களின் சமூக ஊடகத் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், டிக்டாக் மற்றும் வைபர் போன்ற சில தளங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து செயல்படுகின்றன.