காசாவில் 8 பேரை பொது இடத்தில் சுட்டுக் கொன்ற ஹமாஸ்! டிரம்ப் கொடுத்த வார்னிங்!

Published : Oct 16, 2025, 04:02 PM IST

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, காசாவில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுக்கு உதவியதாகக் கூறி 8 பேரை பொதுவெளியில் சுட்டுக் கொன்றுள்ளது.

PREV
13
மீண்டும் காசாவைக் கைப்பற்ற முயலும் ஹமாஸ்

இஸ்ரேஸ் ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாலஸ்தீனிய காசா பகுதியில் தனது பிடியை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் முயற்சி செய்கிறது. காசாவில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் 8 பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக்கொலை செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், இந்த கொடூர நடவடிக்கையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பச்சை தலைப்பாகை அணிந்து துப்பாக்கி ஏந்திய பேர் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் உள்ள 8 ஆண்களை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்வது வீடியோவில் காணப்படுகிறது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எட்டுப் பேரும் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டவர்கள் என ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

சுற்றியுள்ள கூட்டத்தினரிடையே, “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கங்களும் கேட்கின்றன. ஹமாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கொல்லப்பட்டவர்கள் "குற்றவாளிகள் மற்றும் இஸ்ரேலின் கூட்டாளிகள்" என்று கூறப்பட்டுள்ளது.

23
ஹமாஸ் காசாவை கட்டுப்பாட்டில் வைக்க முயல்வது ஏன்?

இஸ்ரேலிய ராணுவம் (IDF) காசாவின் சில பகுதிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஹமாஸ் விரைவாகத் தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது. உள்ளூர் ஆயுதக் கும்பல்களை ஹமாஸ் குறிவைக்கிறது.

இஸ்ரேலியப் படைகள் விலகிய பகுதிகளில், தங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு கொல்வதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயல்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த கும்பல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஹமாஸ் கூறுகிறது.

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களின் போது கலைந்து சென்ற ஹமாஸ் குழுவினர் தற்போது மீண்டும் வீதிகளில் ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர். காசாவுக்கு வந்த நிவாரணப் பொருட்களைக் கடத்தி அதிக விலைக்கு விற்ற கும்பல்களுக்கு எதிராகவே ஹமாஸ் செயல்படுவதாக சில பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.

33
ஹமாஸ் குழுவுக்கு டொனால்டு டிரம்பின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். "அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணிகளாக்குவோம். அது விரைவாகவும், ஒருவேளை வன்முறையாகவும் நடக்கும்," என்று டிரம்ப் எச்சரித்தார். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் முற்றிலுமாக கலைக்கப்படும் வரை போர் நிற்காது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஹமாஸ் ஆயுதங்களுடன் இருக்கும் வரை, அது காசாவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்றும், தனது இராணுவத் திறன்களை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் என்றும் இஸ்ரேலியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை முழுமையாக ஏற்கவில்லை. மேலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி வருகிறது. போர்நிறுத்த காலத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளத் தாங்கள் விரும்புவதாகவும் ஹமாஸ் கூறுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories