பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான 'ZachXBT' மற்றும் 'Dark Web Informer' ஆகியோர் இந்த பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். ஹேக்கர்கள் பின்பற்றிய எளிய வழிமுறை பின்வருமாறு:
1. இருப்பிடத்தை மாற்றுதல்: முதலில் ஹேக்கர்கள் ஒரு விபிஎன் (VPN) பயன்படுத்தி, எந்தக் கணக்கை முடக்க வேண்டுமோ அந்த பயனர் இருக்கும் அதே பகுதியில் தாங்களும் இருப்பது போல இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு அமைப்பை நம்பவைத்தனர்.
2. ஏஐ சாட்பாட்டிடம் பேசுதல்: இன்ஸ்டாகிராம் லாகின் பக்கத்தில் உள்ள 'Forgot Password' மற்றும் 'Get Support' ஆப்ஷன்கள் மூலம் மெட்டா ஏஐ சப்போர்ட் அசிஸ்டெண்ட் உடன் அரட்டையைத் தொடங்கினர்.
3. வார்த்தை ஜாலம் (Prompts): சாட்பாட்டிடம் சாதுரியமாகப் பேசி, பாதிக்கப்பட்ட பயனரின் கணக்கில் ஒரு புதிய ஈமெயில் முகவரியை சேர்க்குமாறு அதை நம்பவைத்தனர்.
4. கணக்கு முடக்கம்: ஏஐ சாட்பாட் புதிய ஈமெயில் முகவரியை ஏற்றுக்கொண்டவுடன், அதற்கான சரிபார்ப்புக் குறியீட்டை (Verification Code) அசல் பயனருக்கு அனுப்பாமல் ஹேக்கரின் ஈமெயிலுக்கு அனுப்பியது. அந்த குறியீட்டைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதாக பாஸ்வேர்டை மாற்றி, கணக்கைக் கைப்பற்றினர்.
சில சமயங்களில், ஹேக்கர்கள் நேரடியாக சாட்பாட்டிடம் தங்களின் ஈமெயில் முகவரிக்கு பாஸ்வேர்ட் ரீசெட் குறியீட்டை அனுப்பக் கோரியதாகவும், அதற்கு அந்த ஏஐ அசிஸ்டெண்ட் இணங்கியதாகவும் கூறப்படுகிறது.
டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் வேலை செய்ததா?
பொதுவாக கணக்குகளைப் பாதுகாக்கப் பயன்படும் டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் (2FA) இந்த தாக்குதலின் போது வேலை செய்ததா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சில பயனர்கள் தங்களின் கணக்குகளில் 2FA இருந்தும் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.