16 வயது மகன் ChatGPT ஆலோசனையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி பெற்றோர் OpenAI மீது வழக்கு தொடுத்துள்ளனர். ChatGPT இளைஞனின் உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்து தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) காரணமாகத் தங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அமெரிக்காவில் பெற்றோர்கள் ஒரு முக்கிய வழக்கைத் தொடுத்துள்ளனர். 16 வயதுடைய தங்கள் மகனின் தற்கொலைக்குக் காரணமான ChatGPT-ஐ உருவாக்கிய Open-AI நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) மீது அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24
ChatGPT-யிடம் ஆலோசனை கேட்ட இளைஞர்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 16 வயதான இளைஞர் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பாக, அவர் ChatGPT-யிடம் ஆலோசனை கேட்டுள்ளார். ChatGPT, அந்த இளைஞனின் தனிப்பட்ட உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்து, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளவும், இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவும் ஊக்குவித்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், இதேபோன்ற மனநலப் பிரச்சனைகளுக்காகச் சிகிச்சை எடுத்துவந்த அந்த இளைஞர், ChatGPT-யுடன் உரையாடிய பிறகு, தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்த குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
34
ஓப்பன்ஏஐ நிறுவனம்தான் பொறுப்பு
இந்த வழக்கைத் தொடுத்த பெற்றோர்கள், இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ChatGPT உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இளம் வயதினருக்குப் பாதுகாப்பற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கியதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. இளம் வயதினர் மனநலப் பிரச்சனைகளுக்காகச் செயற்கை நுண்ணறிவை நாடும்போது, அதற்குத் தீங்கிழைக்காத, பொறுப்புள்ள பதில்களை அளிப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.