தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்த முயற்சிகளும், தமிழக மக்களின் மனங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது, இந்த விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை என்பது சாதாரண தொழிற்சாலை அல்ல. தூத்துக்குடி மக்களின் உடல் நலம், குடிநீர், நிலம், கடல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதித்த வரலாற்றுச் சோகத்தின் நினைவுச்சின்னமாக உள்ளது. அந்த ஆலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் ஜனநாயக முறையில் போராடிய போது, அரசின் துப்பாக்கிச் சூட்டில், நமது இரத்த சொந்தங்கள் உயிரிழந்த துயரம் இன்னும் தமிழ்நாட்டின் மனச் சாட்சியில் அழியாமல் நிற்கிறது.