கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து கரூர் வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை கூறினார்.
24
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிறகு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, “கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது. நெரிசலில் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்கக்கூடாது. கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை.
34
கரூர் துயர சம்பவம்
இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உறுதுணையாக இருப்போம். ஓய்வுப்பெற்ற நீதியரசர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் படி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை.
கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு. உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும்.நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அரசு அவர்களுக்கு துணை நிற்கும்” என்று பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினருடன் கரூர் அரசு மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.