2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தமிழக வெற்றி கழகத்துடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தையில் 80 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய பாஜக முன்வந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தவெகவுக்கு 80 தொகுதிகள் வழங்கும் பட்சத்தில் தனிப்பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் உருவாகலாம் என்பதால் அதிமுக அதனை நிராகரித்துவிட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வலம் வந்தன.
24
ஆஃபர் தேவையில்லை. மக்களின் ஆதரவு தான் வேண்டும்
இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் தவெக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விழாவில் அவர் பேசியதாவது, “தமிழக வெற்றி கழகத்திற்கு ஆஃபர் தேவையில்லை. மக்களின் ஆதரவு தான் வேண்டும். அடுத்து அமையவிருக்கும் அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டுமென தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் கிடையாது விஜய்.
34
90 தொகுதி + முதல்வர் பதவி..
கூட்டணியில் தவெகவை சேர்ப்பதற்கு 90 தொகுதிகள், 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி தருவதாகக் கூறி பேரம் பேசினார்கள். ஆனால் நாங்கள் டெல்லிக்கு அடிபணிய மாட்டோம். தலைவரின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாததற்கு அரசியல் தான் காரணம். பராசக்தி திரைப்படம் தடையின்றி வெளியாகிறது. பின்னர் அவர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ஆனால் எங்கள் படம் வெளியாகவில்லை. வரக்கூடிய தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது” என்று தெரிவித்தார்.
தனித்து களம் காண்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரக்கூடிய தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நம் தமிழர் என நான்கு முனைப்போட்டியை உருவாக்கி உள்ளது.
முன்னதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் ராமதாஸ் பாமக, சசிகலா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக செய்தி பரவிய நிலையில் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் அதனை மறுத்தது குறிப்பிடத்தக்கது.