TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறித்த அப்டேட்டை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
24
அடுத்த 4 நாட்கள் மழை
வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூலை 28 முதல் 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான வானிலை முதல் மிதமான மழை தொடரக்கூடும். மற்ற மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் சுமார் 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு இருந்தாலும், மாநிலத்தின் சில உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரும். வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று தமிழகத்தின் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.