Driving Licence: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 15) முதல் ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் லைசென்ஸ் பெறலாம். QR Code மூலம் சரிபார்க்கவும், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யவும் வசதி.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு லைசென்ஸ் எப்போது வரும் என இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில், இன்று (செப்டம்பர் 15) முதல் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால், ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உரிமத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருக்காமல், டிஜிட்டல் முறையில் உரிமத்தைப் பெற முடியும்
25
இன்று முதல் புதிய நடைமுறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இனி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அதே நாளில் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (Digital Driving Licence) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிப் பொருத்தப்பட்ட அட்டை தபால் மூலம் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும்.
35
ஓட்டுநர் தேர்வு எப்படி நடைபெறும்?
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அறிமுகமானாலும், ஓட்டுநர் தேர்வு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. முதலில் விண்ணப்பதாரர் Learner’s Licence (LLR) பெற வேண்டும். LLR பெற்ற 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தர ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த LLR-ன் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்கள்.
அதன்பிறகு, விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும் தேதியில் RTO அல்லது உரிய ஓட்டுநர் தேர்வு மையத்தில் வாகனத்தை ஓட்டும் திறன் சோதிக்கப்படும். இதில் வாகனத்தை சரியாகக் கட்டுப்படுத்துதல், சாலை விதிகளைப் பின்பற்றுதல், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட அம்சங்கள் கவனிக்கப்படும். ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தில் QR கோடு இடம்பெறும். இதை போக்குவரத்து அதிகாரிகள் அல்லது தொடர்புடைய அதிகாரப்பூர்வ அமைப்புகள் ஸ்கேன் செய்து, உரிமம் உண்மையானதா என்பதை ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்க முடியும்.
மேலும், டிஜிட்டல் உரிமத்தின் நகல் தொலைந்துவிட்டாலும், தேவையான நேரத்தில் ஆன்லைன் மூலம் மீண்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதனால் அட்டையைத் தொலைத்துவிட்டால் புதிய அட்டை வரும் வரை காத்திருக்க வேண்டிய சிரமமும் குறையும்.
55
காத்திருக்கும் சிரமம் குறைய வாய்ப்பு
மேலும், “Anywhere Registration / Licensing” திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு வசதியான இடத்திலிருந்தே போக்குவரத்துத் துறையின் சில சேவைகளைப் பெற முடியும். இதனால் RTO அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது.
மொத்தத்தில், இன்று முதல் அறிமுகமாகும் இந்த மாற்றங்கள் மூலம், ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை வேகமாகவும் எளிமையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆவணங்களை கையாளும் சிரமம் குறைந்து, டிஜிட்டல் முறையில் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.