Published : Jan 08, 2026, 09:24 AM ISTUpdated : Jan 08, 2026, 09:30 AM IST
School Teacher: சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தைப் பிடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. .
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளத்தை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
24
தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ்
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 24 முதல் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 5 அன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
34
சம்பளம் பிடிக்க உத்தரவு
அப்பாடபுத்தகங்களை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணி உடனடியாக மேற்கொள்ளுவதற்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஒழுக்கம்குறையும் வாய்ப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு "No work No pay" அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வருகை புரியாமல் உள்ள ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் வர இயலாதவர்களை தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது. பணிக்கு வருகை புரியாத நாட்களை ஊதியமில்லா விடுப்பாக அனுமதித்து, அவர்களின் வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) உறுதி செய்ய வேண்டும். ஆகவே, ஜனவரி 5ம் தேதி முதல் (தேதி வாரியாக) போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.