
மக்களின் உயிர் காக்க வேண்டிய மருத்துவர், மக்களின் வரிப்பணத்தில் கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு, பகல் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக (Block Medical Officer) பணியாற்றும் டாக்டர் மார்கண்டனின் கடந்த 17 ஆண்டுகால அட்டூழியங்கள், அந்தப் பகுதி மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.
அரசு மருத்துவமனையில் முழுநேரம் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் நோயைத் தீர்க்க வேண்டிய மார்கண்டன், இன்று ஒரு 'கிளினிக் அதிபராக' உருவெடுத்துள்ளார். இடைக்காட்டூர் மற்றும் மானாமதுரை என இரண்டு இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் இவர், அரசுப் பணி மருத்துவ பணிக்கு செல்லாமல், அதிகாரிகளை ஏமாற்றி அதே நேரத்திலேயே அந்த இரு கிளினிக்குகளையும் நடத்தி வருவதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேதனையோடு குமுறுகின்றனர். "முத்தனேந்தல் , நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் மார்கண்டனை கடந்த ஆண்டு வட்டார மருத்துவ அலுவலராக, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மீனாட்சி நியமித்துள்ளார். இந்த மார்கண்டன் காலை முதல் மதியம் வரை இடைக்காட்டூர் கிளினிக், மாலை வேளையில் மானாமதுரை கிளினிக். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு பணிக்கு ஒரு 'விசிட்' அடிப்பதோடு சரி. மீதி ஆறு நாட்களும் அரசு மருத்துவமனை பக்கம் இவர் தலை வைத்தே படுப்பதில்லை. அரசு வழங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, அந்த நேரத்தை தனது கல்லாவை நிரப்பப் பயன்படுத்தும் இவரைப் போன்றவர்கள் மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளவே தகுதியற்றவர்கள்.
புகைப்படம்: மானாமதுரை கிளினிக்
மார்கண்டன் வெறும் கடமை தவறியவர் மட்டுமல்ல. ஒரு மகா ஏமாற்றுக்காரர் என்பது அவர் தயார் செய்யும் 'ரிப்போர்ட்களில்' தெரிகிறது. தான் நடமாடும் மருத்துவ குழுவுடன் ஃபீல்டுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை செய்ததாக கடந்த 7 வருடங்களாக மேலிடத்திற்கு தகவல்களை அனுப்பி நம்ப வைக்கிறார். இதற்கு அவருக்குத் துணையாக இருப்பது ஸ்டாஃப் நர்ஸ் அக்கினி வீரன். ஸ்டாப் நர்ஸ் அக்கினி வீரன் தான் நடமாடும் மருத்துவ குழுவிற்கு மருத்துவர் போல் அதிகாரம் செய்து வருகிறார்.
மார்கண்டன் செய்ய வேண்டிய களப்பணிகளை அக்கினி மேற்கொள்வதும், அதற்குப் பிரதிபலனாக அக்கினி அந்தப் பகுதியில் ஒரு 'பெரிய டாக்டர்' போலவே பந்தா செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களிடம் அக்கினி காட்டும் அடாவடி கொஞ்சநஞ்சமல்ல. ஒப்பந்த ஊழியர்களான டிரைவர், கிளீனர் உள்ளிட்டோரின் வேலையைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டி, தங்களது சட்டவிரோதச் செயல்களை மூடி மறைக்க இந்த 'கூட்டுக்களவாணி' கூட்டணி கச்சிதமாகச் செயல்படுகிறது.
புகைப்படம்- இடைக்காட்டூர் கிளினிக்
கடமை தவறுதல், நம்ப வைத்து மோசடி ஒருபுறம் என்றால், மார்கண்டனின் கீழ்த்தரமான நடத்தை மறுபுறம் அருவருக்கத்தக்கதாக உள்ளது. சக பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், அவர்களைச் சீண்டுவதும் இவரது வாடிக்கை. 2018ம் ஆண்டு விசாலாட்சி என்கிற துணிச்சலான பெண் நர்ஸ் இவர் மீது அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்து நடவடிக்கைக்கு உள்ளானவர் இந்த மார்க்கண்டன். நடமாடும் மருத்துவரான அவரை மருத்துவமனைக்கு உள்ளேயே வரக்கூடாது என கண்டிப்பு காட்டினார் அப்போது மாவட்ட அதிகாரியாக இருந்த பெண் அலுவலர்.
கிராமப்புறங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும் ஏழைப் பெண்கள், மானத்திற்கு அஞ்சி மார்கண்டனின் இரட்டை அர்த்த பேச்சுகளையும், சீண்டல்களையும் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் ( Review Meeting) கலந்து கொள்ளும், இவரை விட மூத்த பெண் ஊழியர்களையும் இவர் ஒருமையில் பேசுவது அதிகாரத்தின் உச்சபட்ச துஷ்பிரயோகம்.
ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, சக பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பு வழங்காத இந்த மார்கண்டன் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது தமிழக சுகாதாரத் துறைக்கே இழுக்கு!
புகைப்படம்: முதலில் இருப்பவர் மார்கண்டன்
ஆண்டுக் கணக்கில் ஒரு நடமாடும் மருத்துவ குழு மருத்துவர், கடந்த ஒரு வருடமாக பி.எம்.ஓ பொறுப்பில் இருக்கும் அதிகாரி பணிக்கு வராமல் சொந்த கிளினிக் நடத்த முடிகிறது என்றால், மாவட்ட மருத்துவ அதிகாரியின் 'கவனிப்பு' இன்றி இது நடக்குமா? மேலதிகாரிகள் 'விசாரணை நடத்துகிறோம்' என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
பொதுமக்கள் சொன்ன புகாரை உறுதிப்படுத்த, ஊடகத்துறையினர், சில அச்சு ஊடகத்தினர் வாரக்கணக்கில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், பணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மார்க்கண்டன் அதே நேரத்தில் சொந்த கிளினிக்கை கவனித்துக் கொண்டிருந்தபோது ஜிபிஎஸ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மார்கண்டனின் அத்தனை முகத்திரையையும் கிழித்து எறிந்துவிட்டன. அவர் அரசு மருத்துவமனைக்கு வராமல் கிளினிக்கில் கல்லா கட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஆதாரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம்: மார்கண்டன் ஆய்வுக்கு செல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம்
ஏழை மக்கள் நம்பிக்கையோடு வரும் அரசு மருத்துவமனையைத் தனது சுயநலத்திற்காகச் சீரழிக்கும் மார்கண்டன் போன்றவர்கள் இன்னும் பணியில் நீடிப்பது சமூக அநீதி. அரசுச் சம்பளத்தைத் திருடும் இந்த 'டாக்டர்' மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா? அவருக்குத் துணையாக இருக்கும் நர்ஸ் அக்கினி வீரன் மீது விசாரணை நடத்தப்படுமா? புகார்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மேலதிகாரிகள் மீது அரசு சாட்டையைச் சுழற்றுமா? மக்களின் வரிப்பணம் மார்கண்டனின் தனிப்பட்ட சொத்து அல்ல. உடனடியாக இவரைப் பணியிடை நீக்கம் செய்து, கடந்த 17 ஆண்டுகளில் அவர் செய்த முறைகேடுகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில், முத்தனேந்தல் வட்டார மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.