தென் மாவட்டங்களில் கன மழை
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட வடு இன்னும் ஆராத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்து வானிலை மையம் அடுத்து வரும் தினங்களில் தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
tamilnadu heavy rain
மழை பெய்ய வாய்ப்பா.?
இதன் காரணமாக இன்று (10.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு
நாளை (11.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்
வேலைக்கும் போகலை.. உடமையையும் இழந்துட்டாங்க.. வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்திடுக- இபிஎஸ்