மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து, பின்னாளில் தோற்கடித்த தொகுதி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த தொகுதியை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, ஜெகதேவி போன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் பர்கூர் தொகுதி. மாம்பழம் மற்றும் தென்னை விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பர்கூர் ஜவுளி மார்க்கெட் முக்கிய வர்த்தக வேலைவாய்ப்பாகவும் இருக்கிறது. ஜெகதேவி பகுதிகளில் கிரானைட் தொழிற்சாலை, பர்கூர் சிப்கார்ட், போச்சம்பள்ளி சிப்கார்ட் ஆகியவை மக்களுக்கு தொழில்துறை வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
24
அதிமுக கோட்டையாக திகழும் பர்கூர்
பர்கூர் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 135 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 197 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 349 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது. திமுக வெறும் 3 தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்கிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் மறக்கவே முடியாத தொகுதியாக பர்கூர் இருந்து வருகிறது.
34
ஜெயலலிதாவை முதல்வராக்கிய தொகுதி
1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கேயம் மற்றும் பர்கூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்த ஜெயலலிதா, முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அப்போது காங்கேயம் தொகுதியை விட்டுவிட்டு, பர்கூர் எம்.எல்.ஏ-வாக ஜெயலலிதா, தொடர்ந்தார். அதனால், வரலாற்றில், முதலமைச்சர் தொகுதி என்கிற அந்தஸ்தும் பர்கூருக்கு உண்டு. அதே தொகுதியில் 1996 தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்ததும் மறக்க முடியாத நிகழ்வாக பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில், திமுகவிடம் ஜெயலலிதா தோல்வியை தழுவினார்.
2006-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் தம்பிதுரை போட்டியிட்டு வென்றார். ஆனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்பி ஆனதால், 2009-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. ஆளும் கட்சியாக இருந்த திமுக, அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. மீண்டும் 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றியை வசமாக்கியது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் மதியழகன், 12 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனால் இந்த தேர்தலில் பர்கூர் யார் கைவசம் செல்லப்போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.