புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது LPG கேஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சில இ-சேவை மையங்களில் கேஸ் ரசீது கட்டாயம் எனக் கூறப்பட்டதால் பொதுமக்களிடம் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
என்ன ஆவணங்கள் தேவை?
துறையின் விளக்கப்படி, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் விவரங்கள் முக்கியமாகப் பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு, குடும்பத்தின் முகவரியை (Address) உறுதிப்படுத்தும் ஆவணமாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
60 நாட்கள் அவகாசம்
மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், தேவையான ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தால், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க அரசுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.
உதவி எண்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, ஏற்கனவே அளித்த விண்ணப்பத்தின் நிலையைப் பார்ப்பது, முகவரியை மாற்றுவது, குடும்பத்தில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைனிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்.
குடும்ப அட்டை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், 1967 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.