Chennai Crime: சென்னை அடையாறில், திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான குணா (எ) குணசேகரன் ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் குணா (எ) குணசேகரன்(45). திமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மீது கடந்த ஆண்டு நடந்த வழக்கறிஞர் கவுதம் என்பவரின் கொலை வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான குணா திமுகவில் முக்கிய பிரமுகருடன் நட்பில் இருந்து வந்துள்ளார்.
24
முகம் சிதைந்த நிலையில் கொலை
இந்நிலையில் சென்னை அடையாறு இந்திரா நகர் பெட்ரோல் பங்க் அருகே தனது நண்பருடன் நேற்று மாலை நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது குணசேகரனை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் அவர்களிடம் தப்பித்து அடையார் பிரதான சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் குணசேகரனை விடாமல் ஓட ஓட துரத்தி சென்று அரிவாளால் கொடூரமாக சரமாரியாக வெட்டியது. இதில் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் குணசேகரன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஆனால் குணாவின் நண்பர் அவர்களிடம் தப்பித்தார்.
34
போலீசார் வழக்குப்பதிவு விசாரணை
இதுகுறித்து தகவலறிந்து அடையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
அதாவது சென்னை திருவான்மியூர் அவ்வை நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கவுதம். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இரவு திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குணாவின் மகளை அதேத பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகவும் அந்த இளைஞரை குணா மிரட்டியததாகவும் கூறப்படுகிறது. அந்த இளைஞருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரத்தில் வழக்கறிஞர் கவுதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், திமுக பிரமுகருமான குணசேகரன், கமலேஷ், நித்தியானந்த், பார்த்திபன், சதீஷ் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் குணசேகரன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் தனுஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.