
Virat Kohli Completes 9000 Runs in Test Cricket : பொறுமையான விளையாட்டுகளில் ஒன்று டெஸ்ட் கிரிக்கெட். 5 நாட்கள் நின்று விளையாடக் கூடிய விளையாட்டு. ஆனால், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அப்படியில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்பதை விட நிலைத்து நின்று விளையாட வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி நிலைத்து நின்று விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று படைத்துள்ளார்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டமானது மழையின் காரணமாக நடக்கவில்லை. 2ஆவது நாள் போட்டி நேற்று டாஸ் உடன் தொடங்கியது. ரோகித் சர்மா டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தார்.
ஆனால், முதல் நாள் பெய்த மழையின் காரணமாக பிட்ச் இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. இந்திய அணியின் வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்தியா 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும், சொந்த மண்ணில் கம்மியான ரன்கள் எடுத்த மோசமான சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியால் நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. இதில், டிம் சவுதியும் தன் பங்கிற்கு 73 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
மூன்றாவது நாளில் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், 8ஆவது விக்கெட்டிற்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சவுதி இருவரும் இணைந்து அதிகபட்சமாக 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர். இதன் மூலமாக 50 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 1974 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெய்த் பாய்ஸ் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் ஜோடி 8ஆவது விக்கெட்டிற்கு 124 ரன்கள் குவித்தது. இந்த சாதனை 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
இதில் ஜெய்ஸ்வால் அவசரப்பட்டு இறங்கி அடிக்க முயற்சித்து 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இணைந்து ரன்கள் குவித்தனர். ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் கிளீன் போல்டானார். அவர் 63 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 52 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு சர்ஃபராஸ் கான் உடன் இணைந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
கோலி 70 பந்துகளில் 31ஆவது அரைசதத்தை பதிவு செய்த அவர், இந்த ஆண்டில் அடித்த முதல் அரைசதம் ஆகும். முதல் இன்னிங்ஸில் கோலி 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்ஸில் கோலி 53 ரன்கள் எடுத்ததன் மூலமாக டெஸ் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களும், ராகுல் டிராவிட் 13,265 ரன்களும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களும் எடுத்துள்ளனர். ஆனால், இன்னிங்ஸ் அடிப்படையில் இந்த மைல்கல்லை மெதுவாக எட்டிய வீரரானார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் – 111 போட்டிகள், 179 இன்னிங்ஸ் – 15921 ரன்கள்
ராகுல் டிராவிட் – 104 போட்டிகள், 176 இன்னிங்ஸ் – 13265 ரன்கள்
சுனில் கவாஸ்கர் – 110 போட்டிகள், 192 இன்னிங்ஸ் – 10122 ரன்கள்
விராட் கோலி – 116 போட்டிகள், 197 இன்னிங்ஸ் – 9017 ரன்கள்
இந்தப் போட்டியில் 53 ரன்கள் எடுத்த போது 9000 ரன்களை கடந்த விராட் கோலி கடைசியில் 3ஆவது நாள் போட்டியில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர், 102 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் 78 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 70* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். 3ஆவது நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.